1. Home
  2. தமிழ்நாடு

புளி விவசாயிகள் வாழ்வாதாரம் உயர புளி பதன கிடங்கு அமைக்கப்படும் : எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி..!

1

‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் நத்தம் தொகுதியில் நடைபெற்றது. 

விவசாயிகளிடம் புளி விளைச்சல் நிலவரம் மற்றும் விற்பனை சந்தை பற்றிக் கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமியிடம், அங்கு இருந்த விவசாயிகள் தங்களது சிக்கல்களை வெளிப்படுத்தினர். அவர்கள், “நத்தம் பகுதியில் மட்டும் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புளி விளைவிக்கப்படுகிறது. இதனை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம். தற்போது பதப்படுத்தப்பட்ட புளி கிலோவுக்கு 130 ரூபாய்க்கும், கொட்டையுடன் உள்ள புளி கிலோவுக்கு 70 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. எங்களது வாழ்வாதாரமே இந்த புளி விவசாயம் தான்” என தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், “புளியில் இருந்து விதைகளை எடுக்கும் நபர்களுக்கு 15 கிலோவுக்கு 200 ரூபாய் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் எங்களுக்கென தனி நலவாரியம் இல்லாததால் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். புளி வியாபாரிகளுக்கான நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும். மேலும், புளிக்கான பதனக் கிடங்கு இல்லாததால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். ஒரு குளிர் பதனக் கிடங்கு அமைக்கப்பட்டால், புளியை ஒரு வருட காலத்திற்கு இருப்பில் வைத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை கவனமாகக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், புளி விவசாயிகளுக்கென குளிர்பதனக் கிடங்கு அமைத்து தரப்படும். இதனால் உங்களது உற்பத்தி வீணாகாமல், சரியான விலைக்கு விற்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் புளி வியாபாரிகளுக்கான நலவாரியமும் அமைக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

Trending News

Latest News

You May Like