பண மோசடி செய்ததாக எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்ததாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளரான மணி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு தரப்பினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார்கள் தொடர்ச்சியாக குவியத் தொடங்கியதை அடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவரும் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், மணி முன் ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை சேலம் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in