ஏக்கருக்கு ரூ.30,000-ஐ வறட்சி நிவாரணமாக வழங்குங்க - எடப்பாடி பழனிசாமி..!
டெல்டா குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்து விடாததால் பயிரிடப்பட்ட குறுவைப் பயிர்கள் கருகின. குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு பெற முடியவில்லை.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பாதிக்கப்பட்ட பாசன பரப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியதை டெல்டா விவசாயிகள் மறக்கவில்லை.
எனவே, இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றும், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால், வேளாண் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்துக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த வறட்சியால் கால்நடைகளுக்கு வைக்கோல் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வினால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்புக்கு தேவைப்படும் தீவனங்களை விலையில்லாமல் வழங்கிட வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.