பாஜகவின் அடிமை போல எடப்பாடி பேசுகிறார்... அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு!

2027 மார்ச் 1-ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தொகுதி மறுவரை ஆபத்து குறித்து முன்பே கூறியிருந்தேன். நான் கூறியதைப் போல நடந்துவிட்டது என்றும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். முதல்வரின் கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வினை ஆற்றியிருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். அதில், தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்துள்ளேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார்.
ஆனால், எதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தபோது திடீரென பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன் என்று பொய் கூறினார். கார்கள் மாறி மாறி உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு சென்றுள்ளார். பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணி ஆக்க போயிருக்கிறார் அவர்.
பாஜகவின் சதித் திட்டத்தை முதல்வர் அம்பலப்படுத்தியவுடன் அவர்களை காப்பாற்ற புரளி நாடகம் போட வந்துவிட்டார் பழனிசாமி. ஹிந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என தமிழ்நாட்டை ஆதிக்கம் செய்யும் பாஜகவோடு கூட்டணி வைத்துவிட்டு அதை எதிர்ப்பேன் என்கிறார். மாநிலங்களை ஒழித்து நாட்டின் கூட்டாட்சி ஏற்பாட்டை சிதைக்கத்தான் தொகுதி மறுசீரமைப்பை பாஜக பயன்படுத்த இருக்கிறது.
தொகுதி மறுவரை விவகாரத்தில் பாஜகவின் அடிமை போல எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். கமலாலயத்தின் கருத்தை தனது மவுத்பீஸில் பேசுகிறார். ஏதாவது ஒரு வகையில் தொகுதி மறுவரை குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறாரா. அமித் ஷாவிடம் பேசினேன் என்று எடப்பாடி கலர் கலராக ரீல் விடுகிறார்.
உறுதியாக பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சில காலம் வரை சொல்லிவிட்டு தற்போது, அதிமுகவினரை ஏமாற்றி, தமிழ்நாட்டு மக்களை நம்ப வைத்து பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளே ஒன்று பேசுவதும், வெளியே வந்து பாஜகவின் மனம் நோகாமல் பேசுவதும் என இரட்டை வேடம் போட்டவர் கான் எடப்பாடி பழனிசாமி. என்று தெரிவித்துள்ளார்.