1. Home
  2. தமிழ்நாடு

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

1

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில், ஜாமீன் கோரி அங்கித் திவாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று (டிசம்பர் 19) நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகது ஜின்னா ஆஜராகி, அங்கித் திவாரியிடம் விசாரணை செய்ததில், இந்த வழக்கில் பல அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.. அங்கித் திவாரி லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கியுள்ளது. 75 பேரின் பெயர் பட்டியல் கிடைத்துள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கித் திவாரியே தெரிவித்துள்ளார். அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் மீது வழக்கு இல்லை என குறிப்பிட்டு ஜாமீன் கோருகிறார். ஆனால் திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது மதுரை மண்டல அலுவலகத்தில் வழக்கு உள்ளது.

20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரில் அங்கித் திவாரி பணம் பெறும் போது அவருடைய குரல் பதிவு மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உண்மையா என்பதை கண்டறிய அவருடைய குரலை பதிவு செய்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரை பாதுகாக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயல்கின்றனர். திவாரி கைது செய்யப்படும் வரை அவர் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது, விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது. மனுவை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

அங்கித் திவாரி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசின் அதிகாரி என்பதால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like