கனமழை எதிரொலி.. 27 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தெற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில நீடிக்கிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்களின் நலன் கருதியும் தமிழகத்தின் 27 மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 26ம் தேதியான இன்று விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம் போன்ற 19 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நவம்பர் 26ம் தேதியான இன்று மற்றும் நவம்பர் 27ம் தேதியான நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு முன்னதாக அறிவித்துள்ள படி, இந்த கனமழை காரணமாக அளிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களை கூடுதல் வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.