1. Home
  2. தமிழ்நாடு

குடிபோதையில் தண்டவாளத்தில் கற்களை போட்டு அட்டகாசம்..!

Q

கோவை - சென்னை - கோவை இடையே (12673/12674) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6:00 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவை சந்திப்பு அருகே வந்த போது சிக்னல் கிடைக்காமல் பாதிவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய சோதனையில், கோவை சந்திப்பில் இருந்து சிறிது தூரத்தில் டிராக் மாற்றும் அமைப்பில் கற்கள் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதன் காரணமாகவே சிக்னல் கிடைக்காததும் தெரிந்தது. மேலும், தண்டவாளத்திலும் கற்கள் போடப்பட்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை அகற்றினர்.
இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட அவர்களும் விசாரித்தனர். விசாரணையில் நான்கு பேர் தண்டவாளத்தில் கற்களை போட்டது தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த நான்கு பேரையும் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த வின்சென்ட் ராஜ், 20, விஜய்சங்கர், 21, சதீஸ்குமார், 21, புவனேஸ்வரன், 22 என தெரிந்தது. திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். சதீஸ்குமாரின் தம்பி தென்னம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை பார்க்க நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தனர்.
சதீஸ்குமாரின் தம்பியை செல்போனில் அழைத்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து நான்கு பேரும் மது அருந்தி உள்ளனர். பின்னர் கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்தனர். நேற்று காலை, கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்த தண்டவாளம் வழியாக நடந்து சென்ற நான்கு பேரும், மதுபோதையில் அங்கிருந்த தண்டவாளத்தில் டிராக் மாற்றும் பகுதியில் கற்களை போட்டு தடை ஏற்படுத்தியது தெரிந்தது.
தண்டவாளத்தில் கற்களை போட்டு வாலிபர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட நிலையில், சிக்னல் கிடைக்காமல் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like