லாகூர் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்... குண்டு வெடிப்பால் அலறியடித்து ஓடிய மக்கள்!

இந்திய ராணுவம் நேற்று பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது மற்றும் இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத முகாம்களின் தலைமையிடங்கள், அவற்றின் முகாம்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் ஆகியவற்றின் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
நேற்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லாகூர் அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாகூர் விமான நிலையத்திற்கு அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ கன்ட்டோன்மென்ட் அருகே வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.