கூத்தாடிங்க வந்துட்டாங்கன்னு இழிவா சொல்லாதீங்க... கூத்தாடிங்கறது பெருமையான வார்த்தை - பேரரசு..!
இயக்குனர் பேரரசு ‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியதாவது,
இன்றைக்கு நல்ல விஷயம் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருப்பது சினிமா… சினிமா தான். எங்கயாவது ஒரு மேடையில் அரசியல்வாதிங்க குடிப்பது தவறுன்னு சொல்றாங்களா. தம்பி குடிக்க கூடாது… குடும்பம் சீரழிஞ்சிடும்…னு. அவங்க தான் சொல்லணும். அரசியல்வாதிங்க மக்களுக்காக வந்தவங்க… மக்களின் சேவைக்காக வந்தவங்க.
மது குடிக்காத… பெண்களை மதி… பெற்றோரை மதி… நட்பு மதின்னு எல்லாவற்றையும் சினிமாதான் சொல்லிக்கொண்டு இருக்கு… ஆனா சினிமாக்காரங்க கூத்தாடி. நீங்க என்ன பண்றீங்க… அவன குறை சொல்றது. அவன் இவன சொல்றது. நீ எவ்வளவு ஊழல் பண்ணலையா… நீயும் ஊழல் பண்ணலையா…ன்னு சொல்றது.
இன்றைக்கு யாராவது ஒரு அரசியல்வாதி மேடையில் நல்ல விஷயத்தைப் பேசுறாங்களா? நல்ல விஷயமே இங்க சினிமாதான். சினிமாவை விட உயர்ந்தது இந்த உலகத்தில் எதுவும் இல்ல. ஒரு சில அரசியல்வாதிகள் அரசியல் குடும்பத்திலிருந்து இங்க வந்து நடிப்பாங்க… யாராவது சினிமாக்காராங்க அரசியல்வாதிங்க ஏன் நடிக்கறாங்கன்னு கேட்கவே மாட்டாங்கா… எத்தனை காலமா எத்தனை அரசியல்வாதிங்க வந்திருக்காங்க. கேட்குறமா…. கேட்கமாட்டோம்.
ஆனா சினிமாவிலிருந்து ஒருத்தர் அரசியலுக்கு போய்ட்டா கூத்தாடி ஏன் வரான்னு-ங்கறது. அரசியல்வாதிங்க நடிக்க வந்தா நாங்க ஏத்துப்போம்… ஆனா சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்தா நீங்க ஏத்துக்கமாட்டிங்க.
கூத்தாடிங்கற வார்த்தை இப்போ இல்ல காலம் காலமா கேட்டுக்கிட்டு தான் இருக்கோம். ஆனா ஆண்டுக்கிட்டு தான் இருப்போம். கலைஞர் முதலில் கூத்தாடி… எம்.ஜி.ஆரும். கூத்தாடி. ஜெயலலிதாவும் கூத்தாடி. விஜயகாந்தும் கூத்தாடி தான்… இன்னிக்கு விஜய் அரசியலுக்கு வந்திருக்காரு. இன்னைக்கு அவரையும் நீங்கக் கூத்தாடின்னு சொல்றீங்க…
கூத்தாடிங்கறது நாங்க பெருமையாதான் நினைப்போம்… கூத்தாடிங்க வந்துட்டாங்கன்னு இழிவா சொல்லாதீங்க. கூத்தாடிங்கறது பெருமையான வார்த்தை. அதை இழிவு படுத்த வேண்டாம். யாரையும் இழிவுபடுத்த வேண்டாம். கூத்தாடிங்கறது ஒரு தொழில். எப்படியொரு சாதியைக் குறிப்பிட்டு இழிவா பேசுறது எவ்வளவு பெரிய தப்போ அதை மாதிரி கூத்தாடிங்கற தொழில இழிவா யாராவது பேசினா மிகப்பெரிய தப்பு. அது கண்டனத்துக்குரியது என்றார்.