இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க...இன்று சீதா நவமி.. சிறப்பான வாழ்க்கை அமைய இப்படி வழிபடுங்க..!

மிதிலையின் அரசரான ஜனக மகாராஜா ஒரு பெரிய ஞானி. ஒரு சமயம் ஜனக மகாராஜா நிலத்தை உழுது கொண்டிருக்கும் பொழுது, பூமியில் இருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. அயோத்தியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றிய ராமபிரானை திருமணம் செய்து கொள்வதற்காக, மகாலக்ஷ்மியின் அம்சமாக ஜனக மகாராஜாவுக்குக் கிடைத்த அந்தக் குழந்தை தான் சீதை. நிலத்தில் தோன்றிய அந்தக் குழந்தை சீதை என்னும் பெயர் கொண்டு , மிகச்செல்லமாக மாளிகையில் வளர்ந்து வந்தாள்.
ஒருநாள் சீதை பந்து விளையாடிக் கொண்டு இருந்த போது, பந்து ஒரு பெட்டியின் இடுக்கில் சென்று விட்டது. அந்தப் பெட்டியில் தான் சிவ தனுசு வைக்கப்பட்டு இருந்தது. வில்லை தூக்கி நிறுத்துவதே கஷ்டம். அப்படி இருக்கும் போது, சீதை சிவ தனுசு இருந்த பெட்டியை தன் மலர் போன்ற கைகளால் சற்றே தள்ளிவிட்டு, இடுக்கில் இருந்த பந்தை எடுத்தாள். அதை மாடத்தில் இருந்து பார்த்த ஜனக மகா ராஜா, அந்த வில்லை எடுத்து வளைப்பவனுக்கே சீதையை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்.
அயோத்தி ராமபிரான் வில்லை எடுத்து வளைத்து சீதையை திருமணமும் செய்து கொண்டார். பிறந்த வீடும், புகுந்த வீடும் பெருமை வாய்ந்த ராஜகுலங்கள். இத்தனை சுகபோகங்களில் வாழ்ந்தாலும் ராமர் வனவாசம் செல்ல நேரிட்ட பொழுது, தானும் கணவனுடன் சென்றாள். தீராத துயரையும் அனுபவித்தாள். சீதை உலகம் புகழும் பதிவிரதையாகவும் பரிணமித்தாள். சீதா தேவி தோன்றிய நாளான பங்குனி நவமி அன்றே , "சீதா ஜெயந்தி" என்றும் "சீதா நவமி" என்றும் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மே 05ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமன் அவதரித்த தினத்தை ராம நவமியாக கொண்டாடுகிறோம். அதே போல் சீதா நவமி, சீதா ஜெயந்தி தினமும் உள்ளது. இது சீதா தேவியின் பிறந்த நாளைக் குறிக்கிறது. வைசாக மாதம் எனப்படும் சித்திரை மாத சுக்ல பக்ஷத்தின் நவமி திதியில் இது கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாள் இந்து பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்து இந்த நாளில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு சீதா நவமி மே 5 அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், பக்தர்கள் சீதை தேவியை வழிபட்டு, விரதம் இருந்து, தானம் செய்து அவரின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள். சீதையின் வாழ்க்கை தூய்மை, பக்தி மற்றும் தர்மத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
சீதா தேவி தூய்மை மற்றும் பக்தியின் உருவம் என்று கூறப்படுகிறது. அவளை வழிபடுவதன் மூலம், ஒருவர் தங்கள் ஆன்மாவை தூய்மைப்படுத்தலாம். வாழ்க்கையில் அர்ப்பணிப்புடன் இருக்க முடியும். அவள் தன் முகத்தில் புன்னகையுடன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தாள். இந்த நாளில், பக்தர்கள் சீதா தேவியை நினைத்து, அவரின் குணங்களை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். சீதா தேவி மகாலட்சுமியின் அம்சம் என்பதால் சீதா தேவியை வழிபடுவதால் மகாலட்சுமியின் அருளும், ராமர் மற்றும் அனுமனின் அருளும் கிடைக்கும்.
திருமணமான பெண்கள் சீதா தேவியை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் அவர்களின் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை. அதோடு பெண்களும் பிறர் போற்றி, மதிக்கும் சிறப்பான வாழ்க்கையை பெற முடியும். அதே போல் திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் சீதா தேவியை வழிபட்டால் ராமரை போல் ஒழுக்கத்தில் சிறந்த கணவர் அமைவார் என்பது நம்பிக்கை.
சீதா தேவியின் விரதம் எதற்காக?
'நான் என்னுடைய கணவருடன் தான் இருப்பேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருந்து ஒன்றாக வாழ்வோம், அந்நியோன்யமாக இருப்போம்' என்று ஒரு பெண் உறுதி மேற்கொள்ளவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான, ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால் , இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப் பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராம பிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான் என்பது நம்பிக்கை.
சீதா நவமி விரத பலன்கள் :
அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மை உணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னை அருள்வாள். அதோடு கணவனுடன் என்றும் ஒற்றுமையுட ன், சீரும் சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள். அடிக்கடி கணவன்- மனைவி சண்டை, கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருப்பவர்கள் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால் விரைவில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு, பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.