1. Home
  2. தமிழ்நாடு

இந்த தீவுக்கு தவறி கூட போயிடாதீங்க..!

1

இந்தியாவை சுற்றி இருக்கும் எந்த தீவுக்கும் நீங்கள் போக அனுமதி உண்டு. ஆனால் அந்தமான் தீவு குழுவில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவுக்கு (sentinel island ) மட்டும் போக அனுமதி கிடையாது. அதற்கு காரணம் இந்த தீவில் வாழும் சென்டினலீஸ் பழங்குடியின மக்கள் தான். பலநூறு ஆண்டுகளாக இந்த மக்கள் வெளி உலக மக்களை சந்திப்பதோ பழகுவது இல்லை. அதனால் தான் இந்த தடை உத்தரவு.

இன்னும் சொல்லப்போனால் இந்த மக்களை சந்திக்க இந்திய அரசு மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வெளிநாட்டு குழுக்கள் கூட பலமுறை முயற்சி செய்துள்ளன. ஆனால் அதில் பாதி பேர் உயிரற்ற சடலங்களாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த மக்கள் வெளிநபர்களை எதிரிகளாக பார்க்கிறார்கள். சரித்திரத்தில் 1974 இல் மட்டும் ஒரே ஒரு முறை அவர்கள் வெளிநபர்களை நட்புடன் பார்த்து கொலை செய்யாமல் விட்டிருக்கிறார்கள்.

இந்த தீவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பது கூட சரியாக இதுவரை தெரியவில்லை. தோராயமாக 50 முதல் 400 மக்கள் வசிக்கலாம் என்று நம்பப்படுகிறது. தீவின் புகைப்படங்களைப் பெறுவதற்கு செயற்கைக்கோள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கூட சாத்தியமற்றது. ஏனெனில் இது கடற்கரையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருக்கும்.

இந்தியக் கடலோரக் காவல் படை கடந்த காலங்களில் உணவுப் பொட்டலங்களை இறக்கிவிட வானூர்திகளை அனுப்பியது. ஆனால் சென்டினலீஸ் மக்கள் அதை எதோ வேட்டையாடும் பொருள் என்று நினைத்து அம்பையும் , கற்களையும் வீசியுள்ளனர். இந்த தீவில் கரை ஒதுங்கிய இரண்டு மீனவர்களை அவர்கள் அடித்து கொலை செய்துவிட்டனர். இதனால் 1992 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் தீவின் அருகே செல்ல மக்களுக்கு தடை விதித்தது.

இன்னும் சொல்லப்போனால் இந்த மக்களுக்கு நெருப்பின் பயன்பாடு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இயற்கையான தீயை உருவாக்க மின்னல் தான் ஒரே வழியாக உள்ளது. சென்டினலிஸ்கள் படகுகளை உருவாக்கத் தெரியும், விவசாயத்தில் ஈடுபடவில்லை, அவர்கள் தற்காலிக குடிசைகளில் வாழ்கிறார்கள், உலோகங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களது சொந்த பழங்குடி மொழியில் பேசுகிறார்கள்.

சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் , சென்டினலீஸ்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் , அவர்கள் இயல்பான மனிதர்களைப்போல் கட்டமைக்கப்படாத வாழ்க்கை முறையில் இருப்பதால் மற்றவர்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் கூறுகிறது. மேலும் இந்திய அரசு இந்த தீவிற்கு செல்ல தடை விதித்தது அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்காக மட்டுமல்ல, பழங்குடியினருக்கு சாதாரண நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதாலும் தான்.

News18

வெளி மனிதர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் வெளி உலக நோய்கள் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கான மருத்துவத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அந்த தீவிற்குலேயே அடைந்து இருப்பதால் திடீரென்று வெளி ஆட்கள் தொர்பால் காய்ச்சல் சளி ஏற்பட்டால் கூட அவர்களது எதிர்ப்பு சக்தியால் அதை தாங்க முடியுமா என்று தெரியாது. இருக்கும் மக்கள் தொகையும் குறைந்துவிடும்.

இதனால்தான் எந்தவொரு மனிதனும் வங்காள விரிகுடாவில் உள்ள வடக்கு சென்டினல் தீவுக்கும் தீவில் இருந்து 9.26 கிமீ தூரத்திற்குள் நுழையவோ அல்லது இருக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் அந்த பக்கம் தவறி கூட போய்விடாதீர்கள். கடுமையான தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

Trending News

Latest News

You May Like