கார்ப்பரேட் நிருவனங்களுக்கு நற்செய்தி சொன்ன டொனால்ட் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப், வரும் ஜன.,20ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவரது ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், பதவியேற்புக்கு முன்பாகக் கார்ப்பரேட்களுக்கு நல்ல செய்தியை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 21 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் இல்லாத வகையில் கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்க முடிவு செய்துள்ளோம். உங்களுக்கான வரி சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். உத்தேசமாக 42 அல்லது 44ஆக இருந்த வரி 21 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது, யாரும் நம்ப முடியாத வகையில், அதனை 15 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் உங்களின் தயாரிப்புகளை அமெரிக்க மண்ணில் மேற்கொண்டால் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும்.
மீண்டும் அமெரிக்காவில் தொழில் தொடங்க வருபவர்களுக்குச் சலுகைகள் வழங்குவோம். யாரிடமும் இல்லாத எண்ணெய் மற்றும் கேஸ் நம்மிடம் உள்ளது. என்னுடைய முதல் பதவி காலத்திலேயே முதலிடத்திற்கு கொண்டு வந்தேன். மீண்டும் முதலிடத்திற்கு செல்லப் போகிறோம். உற்பத்தியைப் பொறுத்தவரை, நாங்கள் முதலிடத்தில் இருக்கப் போகிறோம்.
இது எல்லாம் நடக்கும்போது விலைவாசி குறையும். விரைவில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கலாம், எனக் கூறினார்.