இனி நாய் வளர்க்க லைசன்ஸ் கட்டாயம்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4db79b33961a6f91fb738b43d2d4b2be.jpg?width=836&height=470&resizemode=4)
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருத்த 5 வயது சுதக்ஷாவை 2 ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது.இதனால், பலத்த காயமடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாயின் உரிமையாளர் புகழேந்தி மீது ஆயிரம் விளக்கு காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.சிறுமியின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் நாயின் உரிமையாளர். அதன்பிறகு சிறுமி அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ``சமீபத்தில் மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய் இனங்களின் (Foreign Dogs) இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில் ராட்வீலர் வகையும் உண்டு.நாய், பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். சிறுமியை கடித்த ராட்வீலர் நாய்களுக்கு, அதன் உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையாக உரிமம் ஏன் பெறவில்லை? எனக்கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாய்களை வளர்ப்பவர்கள் அது ஒரு சிறந்த துணையாக உள்ளதாக கூறுகிறார்கள், ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளது.
நாய்களுக்கான தடுப்பூசியினை கட்டாயமாக செலுத்த வேண்டும். வீட்டில் எந்த செல்லப்பிராணிகளை வளர்க்கவேண்டும் என்றாலும் உரிமம் பெற வேண்டும்.ஆன்லைனில் கூட வளர்ப்பு பிராணிகளுக்கான உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து இலவச தடுப்பூசிகள் அரசால் கொடுக்கப்படுகிறது என்றார்.