1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் மே மாதத்திற்கான முன்பதிவு எப்போது தெரியுமா ?

1

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாள்தோறும் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மே மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட் வெளியீடு அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தானம் (TTD)வெளியிட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணியளவில் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ,300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அன்று மாலை 3 மணியளவில் தங்கும் விடுதிக்கான கோட்டா டிக்கெட்டுகளும், இதே தளத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

திருமலை மற்றும் திருப்பதியில் ஏராமான தங்கும் விடுதிகள் உள்ளன. திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசம் மற்றும் ரயில் நிலையம் எதிரே உள்ள விஷ்ணுவாசம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்களுக்கான அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பத்மாவதி விருந்தினர் மாளிகை, வெங்கடேஸ்வரா விருந்தினர் மாளிகை, ராம் பகீச்சா வராஹஸ்வாமி ஓய்வு இல்லம், டிராவலர்ஸ் பங்களா, நாராயணகிரி விருந்தினர் மாளிகை, நந்தகம், பாஞ்சஜன்யம், கௌஸ்துபம், வகுல்மாதா, சப்தகிரி குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவையும் திருமலையில் உள்ளனர்.

பக்தர்கள் தாங்கள் தங்குவதற்கு இந்த அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள முடியும். மேலும் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் மின்னணு லக்கி டிப் பதிவு வரும் 18 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதில் கல்யாணோத்ஸவ, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவ சேவை, சஹஸ்ர தீபாலங்கார சேவை, சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கு பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

லக்கி டிப் முடிவுகள் வரும் பிப்ரவரி 20ம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோத்ஸவ, ஆர்ஜித பிரம்மோத்ஸவ, ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் வெளியிடப்படுகிறது.

அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முன்பதிவு அன்றைய தினம் அதாவது 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட தரிசனம் மற்றும் தங்கும் அறைகளின் ஒதுக்கீடு பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.


 

Trending News

Latest News

You May Like