கிரிவலம் செல்லும் போது மழை வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா ?

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அது ஏன் என்பதற்கு புராணத்தில் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன், இன்னும் அதிகம் சக்தி வாய்ந்த பல வரங்களை பெறுவதற்காக மனைவி லீலாவதிக்கு தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி. அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்த படி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்ப மழையாக பொழியத் தொடங்கியது. பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமா தேவி மிகுந்த பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்தமழைப்பொழிவு இறைத் தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப் பின் அமுதத்துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரத்தை ஜெபித்த படி இருந்தாள். அப்போது, விழுந்த அமுதத்துளி பாறையில் பட்டு, அதில் அணுவளவு அவளின் கர்ப்பப்பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும். பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.
அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதிக்கு ஆசி வழங்கினார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அந்த மூலிகையின் சக்தி, கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது. மழையும் வெயிலும் சேர்ந்து வரும் போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியா விட்டாலும் மந்திரம் ஜெபித்த படி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும்.