1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? இன்று வேல் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும்..!

1

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் இணையும் நாளே தைப்பூசம். தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள். மேலும் தைப்பூசத்தன்று நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தர் கலி வெண்பா ஆகிய பாடல்களை பாராயணம் செய்யலாம். முடியாதவர்கள் ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம்.

தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், செல்வம் பெருகும், தொட்ட காரியம் அனைத்தும் பூரணமாக நிறைவேறும்.என்கிறது சாஸ்திரம்.

முருகப் பெருமானை வழிபட செவ்வாய் கிழமை சஷ்டி திதி ஆகியன சிறந்த நாட்களாகும். இதே போல் முருகப் பெருமானின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நான்கு நட்சத்திரங்களில் அவரை வழிபட்டாலும் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும்.

முருகனையும் முருகன் கையில் இருக்கும் வேலையும் வணங்குவோர்க்கு பயம் தோல்வி ஏற்படாது. வறுமை நீங்கும். தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பால் குடங்கள், பல விதமான காவடிகள் தேரோட்டம் ஆகியன நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. தைபூசத்தன்று வேல் குத்தியும், காவடிகள் தூக்கியும் முருகனை வழிபடுவது பல காலமாக வழக்கத்தில் உள்ளது.

முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரத நாட்களில் வைகாசியில் வரும் விசாகம், பங்குனியில் வரும் உத்திரம், தை மாதத்தில் வரும் பூசம் கிருத்திகை ஆகிய நான்கு நட்சத்திரங்களும் மிக விசேஷமானவை.

வைகாசி விசாகம் முருகனின் பிறந்த நட்சத்திரம், பங்குனி உத்திரத்தன்று முருகன் தெய்வானையை மணம் முடித்த நாள், கிருத்திகை ஆறுமுகம் கொண்ட உருவத்தை சக்தி ஒரே உருவமாக இணைத்த தினம். தைப்பூசம் பார்வதியிடம் இருந்து முருகன் வேலை பெற்ற தினம் என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள்.

இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்டதால் தைப்பூச விழா மிகவும் பிரபலமாக உள்ளது. உலக அளவில் முருக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடபடும் விழாவாக தைப்பூசம் உள்ளது.பெரும்பாலனவர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருப்பதை வழக்கமாக வைத்துள்னர்.

மார்கழி மாதம் துவங்கி, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வார்கள்.தைப்பூச நாளில் தான் பூமியில் நீர் தோன்றி அதிலிருந்து உயிர்கள் தோன்ற துவங்கியதாக புராணங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன.தைப்பூச நாளில் தான் முருகப்பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தார்.

அகத்தியருக்கு முருகப்பெருமான் தமிழை கற்பித்ததும் இந்த நாளில் தான் என புராணங்கள் சொல்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி, பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு காட்சி கொடுத்த நாளும் தைப்பூச தினம் தான் என்கிறது புராண வரலாறு.

Trending News

Latest News

You May Like