இது தெரியுமா ? ஆதார் கார்டு, ரேஷன் அட்டை வைத்துள்ள பெண்கள் தமிழ்நாடு அரசின் ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம்..!
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்கள் ரூ.30 லட்சம் வரை கடன் பெறலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதா மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் டாம்கோ லோன் (TAMCO LOAN) திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம / நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும். (திட்டம் 1ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்)
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ20,00,000/-ம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.100,000/-ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுநிலை தொழிற்கல்வி/ தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியருக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மக்களுக்கான அறிவிப்பு
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள் / கருவிகள் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். இப்போது சில மாவட்டங்களில் இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில், திருபத்தூர் மாவட்ட ஆட்சியர் அம்மாவட்ட மக்களுக்காக இந்த அறிவிப்பு கொடுத்துள்ளார். அதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர் சீக்கியர்கள். பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் இந்த திட்டங்களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
தேவையான ஆவணங்கள்
தனிநபர் கடன் திட்டம், சுயஉதவி குழுக் கடன், கைவினை கலைஞர் கடன் திட்டம் உள்ளிட்ட கடன்களுக்கு கடன் விண்ணப்பங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிய ஆவணங்கள்
1 சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.
2. சாதி சான்றிதழ்.
3. வருமான சான்றிதழ்.
4. உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்றிதழ்.
5. ஆதார் அட்டை.
6. திட்ட அறிக்கை.
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.
கல்விக்கடன்
1 சிறுபான்மையினர் மதச்சான்றிதழ் / சாதிச் சான்றிதழ் வருமான சான்றிதழ் நகல் /இருப்பிட சான்றிதழ் நகல்
2. குடும்ப அட்டை / வாழ்விட சான்று (Smart Card)
3. ஆதார் நகல்
4. பள்ளி மாற்று சான்றிதழ் நகல்
5. உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல்
6. கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது- அசல் (Original)
7. மதிப்பெண் சான்றிதழ் நகல்
8. வங்கி கோரும் இதர ஆவணங்கள் - உள்ளிட்டவற்றை சமர்பிக்க வேண்டும்.