இது தெரியுமா ? திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் தரும் தமிழக அரசு..!

நாட்டில் பெண்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் மாநில அரசு பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி திருமணம் ஆகாமால் 50 வயதை கடந்த ஏழை, எளிய பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஜூலை 31, 2008 அன்று சென்னையில் அறிமுகம் செய்த திட்டம் தான் இந்த திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்.
இந்த திட்டன் கீழ் 50 வயதை கடந்த திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 400 உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த தொகை ரூ.1000 ஆக அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நமது நாட்டில் இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்கள் குடும்பத்திலோ அல்லது அக்கம்பக்கத்திலோ திருமணம் ஆகாமால் 50 வயதை கடந்த பெண்கள் இருந்தால் இந்த திட்டத்தை பற்றி எடுத்து சொல்லி பயன்பெற செய்யுங்கள்.
UWPS திட்டத்திற்கான தகுதிகள் என்னென்ன?
திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். அந்த பெண் திருமணமாகாதவராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும், அந்த பெண்ணின் வயது 50 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதேபோல், அந்த பெண் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பாளராக இருக்க வேண்டும். திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய திட்டத்திற்கான நிபந்தனைகள்
இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அதாவது, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் (Live-in Relationship) பெண் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் போன்ற தமிழக அரசின் மற்ற எந்தவொரு ஓய்வூதிய திட்டத்திற்கும் விண்ணப்பித்து இருக்கக் கூடாது. அதேபோல், அரசு ஊழியராகவும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் இரண்டு ஏக்கருக்கு மேல் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் வேறு யாருடைய பாதுகாப்பிலும் இருக்கக்கூடாது.
திருமணம் ஆகாத பெண்கள் உதவித்தொகை திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- ஆதார் அட்டை
- வருமானச் சான்றிதழ்
- வாக்காளர் அடையாள அட்டை
- ரேஷன் கார்டு / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் கார்டு
- பேங்க் பாஸ் புக்
- திருமணமாகாதவர் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- சுய அறிவிப்பு பிரமாணப் பத்திரம் (Self-declaration Affidavit)
திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை
திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
பின்னர், இந்த திட்டம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்குவார்கள். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களையும் பிழை இல்லாமல் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் உடன் இணைத்து சம்பந்தபட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தையும் ஆவணங்களையும் சரிபார்ப்பார்கள். அனைத்தும் சரியாக இருந்தால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். பின்னர், அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்றுவார்கள்.
ஒவ்வொரு படிவத்திற்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதை மறக்காமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விண்ணப்பம் பெறப்பட்ட 30 முதல் 45 நாட்களுக்கு பிறகு, விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.
திருமணமாகாத பெண்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகையை பெற நீங்கள் ஆன்லைன் மூலமோ அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையம் மூலமோ விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால், முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ TN eSevai போர்ட்டலை பார்வையிடவும். இப்போது, Citizen Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். நீங்கள் புதிய பயனராக இருக்கும்பட்சத்தில், New User? Sign Up here என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஒரு புதிய பேஜில் உங்களைப் பற்றி விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்பட்டிருக்கும். அதில், முழுப் பெயர், தாலுக்கா, மாவட்டம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், லான்இன் ஐடி, பாஸ்வோர்டு மற்றும் கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை பிழையில்லாமல் பூர்த்தி செய்து, Sign Up என்ற பொத்தானைக் கிளிக் செய்தால் உங்களுடைய அக்கவுண்ட் ஓபன் செய்யப்படும். இப்போது பேஜின் இடது பக்கத்தில் Services என்ற விருப்பத்தை கிளிக் செய்து, Revenue Department என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அங்கு, ஒரு பட்டியல் தோன்றும் அதில் REV-204 Unmarried Women Pension Scheme (UWPS) சேவையை தேர்ந்தெடுக்கும்போது, Tamil Nadu e-District என்ற வெப் போர்ட்டலுக்கு ரீடைரக் ஆகும். அதில் Proceed என்பதை கிளிக் செய்யவும். CAN number இருந்தால் அதை உள்ளிடவும், ஒருவேளை இல்லையென்றால், CAN Registration க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு Register Can என்பதை கிளிக் செய்தால், ஒரு CAN விண்ணப்பப் படிவம் திரையில் தோன்றும். அதை பிழையில்லாமல் பூர்த்தி செய்து Register என்பதை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும். இப்போது உங்களுக்கான CAN number திரையில் காண்பிக்கப்படும்.
அதன்பிறகு, திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். மேலும், சர்வீஸ் சார்ஜாக ரூ.10 கட்ட வேண்டியிருக்கும். எனவே, Make Payment பொத்தானை கிளிக் செய்து பணம் செலுத்துங்கள். பிறகு, Print Receipt என்பதை கிளிக் செய்து ஒப்புதல் சீட்டை டவுன் செய்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் உங்களுடைய விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பத்தை சரிபார்ப்பார்கள். சரியாக இருக்கும்பட்சத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதத்தை விடுத்து, அடுத்த மாதத்த்தின் முதல் வாரத்தில் இருந்து உங்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.