இது தெரியுமா..? இந்த 2 வகை பாகிஸ்தான் விசாக்களுக்கு மட்டும் விதிவிலக்கு...!

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்பட்ட பகல்ஹாம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பனிப்போர் மூண்டது. மேலும், சிந்து நதி விநியோகத்தை பாகிஸ்தானுக்கு நிறுத்தி வைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் மிரண்டு போன பாகிஸ்தான், ஏவுகணை சோதனை நடத்தியது.
இரு நாடுகளும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து இருப்பதால் போர் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பயணிகள் ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்தது. அதே சமயம் மருத்துவ காரணங்களுக்காக வந்திருந்த நோயாளிகள் மட்டும் ஏப்ரல் 29, அதாவது இன்றைக்குள் (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் பயணிகள் வாகா- அட்டாரி எல்லை வழியாக சாலை மார்க்கமாக நாடு திரும்பினர். இந்த சூழலில் இரண்டு வகையான விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அதன்படி, பாகிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்ட நீண்டகால விசா மற்றும் தூதரக விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், அவர்கள் இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் வெளியுறவு துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
ஏற்கனவே 16 வகையான விசா வைத்திருந்தவர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது நீண்ட கால விசா மற்றும் தூதரக விசா வைத்திருப்பவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.