1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ? ‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலைக்கு சென்றது- இஸ்ரோ..!

1

இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிலவின் தென்துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் நிலைக்கொண்டிருக்கும் இடத்தில் சூரிய வெளிச்சம் குறைந்ததால் ஸ்லீப் மோடுக்கு சென்றது.

லேண்டர் சேகரித்த தகவல்கள் அனைத்தும் பூமிக்கு வந்து சேர்ந்துவிட்டது. வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று மீண்டும் பகல் பொழுது தொடங்கியவுடன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும் இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

நிலவில் தற்போது இரவு தொடங்குவதால், அங்கு குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், விக்ரம் லேண்டர் நேற்று காலை ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ளது. நிலவில் பகல் பொழுது தொடங்கியதும் மீண்டும் அவற்றை இயக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, விக்ரம் லேண்டர் தரையில் இருந்து மேலே எழும்புகிறதா, அவ்வாறு எழும்பிய பிறகு அதை வேறு இடத்தில் பத்திரமாக தரையிறக்க முடிகிறதா என்பதை இஸ்ரோ நேற்று காலை சோதித்துப் பார்த்தது. விக்ரம் லேண்டரை ஸ்லீப் மோடில் வைப்பதற்கு முன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விக்ரம் லேண்டர் அதன் பணி நோக்கங்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில், விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி சுமார் 40 செமீ உயர்ந்து, 30 - 40 செமீ தொலைவில் வேறொரு இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து அமைப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2ம் தேதி ரோவரின் பணி நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அது ஸ்லீப் மோடுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like