இது தெரியுமா ? ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் சுங்க சாவடிகளில் நிற்க வேண்டாம்..!

தனியார் கார்களுக்கு, சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருப்பது ஒரு பெரும் பிரச்னையாகவே உள்ளது.நீண்ட நேரம் காத்திருப்பதுடன், அதிக அளவில் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில், மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குறிப்பிட்ட சுங்கச் சாவடியை அடிக்கடி கடக்கும் வாகனங்கள், மாதத்துக்கு, 340 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.
இதற்கு தங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதுபோல, சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு, ஆண்டு பாஸ் மற்றும் ஆயுட்கால பாஸ் வழங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருகிறது.இதன்படி, ஆண்டு பாஸ் கட்டணமாக, 3,000 ரூபாய் நிர்ணயிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
தற்போது மாதாந்திர பாஸ் வைத்துள்ளோர், ஆண்டுக்கு, 4,080 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. மேலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்க முடியும்.
அதுபோல, 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ஆயுட்கால பாஸ் கட்டணமாக, 30,000 ரூபாய் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மே 1 முதல் அமுலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது