1. Home
  2. தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் உருவான கதை தெரியுமா ?

1

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிபடியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படும் அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. 

இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் இந்த காலக்கட்டத்தில் அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கத்தரி வெயில் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரை மாதம் 21 ம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை மாதத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அறிவியல் படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன் தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.

அக்னி நட்சத்திரம் என்ற வெப்ப காலம் எப்படி உண்டாயிற்று என்பதற்கு புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய மூலிகை செடிகள் இருந்ததால் அதிலிருந்து வரும் வாசனை ஆற்றங்கரைக்கு வருபவர்களை கவர்ந்தது இழுத்தது. இந்த மூலிகைகள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி மழையை பொழி செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இயற்கை அழகு நிறைந்திருந்த இந்த காட்டிற்கு அருகில் இருந்த யமுனையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் நீராட வந்தனர்.

அவர்கள் குளித்து விட்டு கரையேறிய போது அந்தணர் ஒருவர் வந்து, எனக்கு அதிக பசியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள பசிப்பிணி தீர்க்கும் மருந்துகளை சாப்பிட்டால் எனது பசி போய் விடும். இந்த வனத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்ய முடியுமா? என கேட்டார். அவரது தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன், வந்திருப்பது அக்னி தேவன் என்பதை புரிந்து கொண்டார். அவரிடம் கிருஷ்ணனும், அர்ஜூனனும் விபரம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அக்னி தேவன், சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால் அதிகப்பட்டியான நெய்யை சாப்பிட்டதால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்கு ஏற்ற மூலிகைச் செடிகள் இந்த வனத்திற்குள் தான் உள்ளது. ஆனால் நான் இந்த வனத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் போதெல்லாம் இந்திரன் மழையை பெய்ய வைத்து விடுகிறான். அதனால் என்னால் இந்த வனத்திற்குள் செல்ல முடிவதில்லை எனக் கூறி தனது நிலையை விளக்கினான்.

அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர். அக்னி தேவனும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான். உனது பசி பிணி தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையை பெய்ய விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கிருஷ்ணர் கூறினார். அதே போல் அக்னி தேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை பெய்ய வைத்தான் இந்திரன். அதனை அம்புகளை எய்தி அர்ஜூனன் தடுத்து நிறுத்த, காட்டிற்குள் இருக்கும் மூலிகைகளை சாப்பிட்டு, தனது பிணியை தீர்த்துக் கொண்டான் அக்னி தேவன்.

அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன.

Trending News

Latest News

You May Like