ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அடைந்திருப்பது தோல்விகரமான வெற்றி - தமிழிசை..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிப்.5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 38,428 வாக்குகளும், நாதகவின் சீதாலட்சுமி 7,791 வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டன. இருப்பினும் கடந்த இடைத்தேர்தலோடு ஒப்பிடும் போது கணிசமான அளவில் வாக்கு சதவிகிதம் பதிவாகியது. சுமார் 72 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகியதால், திமுக மற்றும் நாதக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் தான் முன்னிலையை தக்க வைத்திருக்கிறார். அவருக்கு சவால் அளிக்கும் வகையில் கூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்குகளை பெறவில்லை. இதனால் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.