அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான ரெய்டுக்கு தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: தமிழகம் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்.
திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழக மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., ஆட்சியே தொடரும். எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. மதுரை பொதுக் குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.