திமுக கிளைச் செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு!

வாணியம்பாடி அருகே தி.மு.க. கிளை செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் வேலாயுதம் (50) கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பிரகாசம் என்பவர் போட்டியிட்டார். அப்போது இருந்தே இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் வேலாயுதம் தனது மோட்டார்சைக்கிளில் இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, வீட்டுக்கு அருகில் இருள்சூழ்ந்த பகுதியில் பதுங்கியிருந்த மர்மநபர் அவரை நோக்கி திடீரென நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். அதில்
அவரின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குண்டுகள் பாய்ந்திருந்தன.
மார்பை நோக்கி பாய்ந்த குண்டுகள் அவருடைய சட்டைப்பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனில் பட்டதால், மார்பு பகுதிக்குச் செல்லவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட மர்மநபரும், அவருக்கு துணையாக வந்த மற்றொருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். காயம் அடைந்த வேலாயுதம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in