பாரதியாரின் பிறந்தநாளில் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து செய்திய கவனிச்சீங்களா!
பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் “உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!. தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகையிலும் பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொண்டாட்டத்தின் போது, பாரதியாரின் சிலையைத் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பல்லக்கில் வைத்துத் தூக்கிச் சென்றார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஆதவ் ஆர்ஜுனா மாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்குத் தனது கவிதை வரிகளால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைத் தனது பாடல்களில் உருவாக்கியவர். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சாதிக்கு எதிரான குரலை உரத்து முழங்கியவர், பெண்ணடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்றார்.
வறுமையான வாழ்வு தன்னை சூழ்ந்தபோதும் தான் கொண்ட கொள்கை இலட்சியத்தைக் கைவிடாதவர். நான் சோர்வடையும் பல நேரங்களில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளைப் போற்றுவோம்.
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?..
- மகாகவி பாரதியார்"
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.