இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கடந்த ஜூன் 15ம் தேதி 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆனி மாத பிரதோஷம் ஜூலை 15ம் தேதி வருகிறது. அத்துடன் ஆடி 1ம் தேதியே அமாவாசையும் வருகிறது. இதனையொட்டி, வருகிற 15ம் தேதி முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.