கொங்கு மண்டல பொறுப்பாளராக துணை முதல்வர் உதயநிதி நியமனம்..?

2021 சட்டமன்றத் தேர்தலை அடுத்து நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 மக்களவை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதற்கு செந்தில் பாலாஜி போன்ற தீவிர களப் பணியாளர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் இவர் மீதான வழக்குகளை தூசு தட்டி நெருக்கடி கொடுக்க டெல்லி காய் நகர்த்தி வருகிறது. சமீபத்தில் கூட உச்ச நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எனவே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினால் மீண்டும் டெல்லியின் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி வரும். எனவே கொங்கு மண்டலத்தில் சரியான நபரை களத்தில் இறக்கி விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். கடந்த தேர்தல்களை காட்டிலும் கூடுதல் உழைப்பை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமித்து தீவிர களப் பணியை மேற்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது தலைமையில் மேற்கு மண்டல மாவட்டங்களில் நிலவும் உட்கட்சி பூசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த கட்சி பணி மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகள் உடன் இணக்கமான போக்கை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளர் தேர்வு, அதிருப்தி கோஷ்டிகளை சமாதானம் செய்தல், தேர்தல் வியூகத்தை சரியாக செயல்படுத்துதல் போன்றவை முக்கியமானவை.
2021 சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்தாலும், கொங்கு மண்டலம் பெரும் பின்னடைவை அளித்தது. இந்த மண்டலத்தில் மொத்தமுள்ள 67 தொகுதிகளில் திமுக கூட்டணி 24 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. குறிப்பாக கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களை முழுமையாக அதிமுக கூட்டணி கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது