பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்பொழுதும் துணை நிற்கும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி..!
கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், முதல்வர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்த துயரத்தை முதலமைச்சரால் தாங்க முடியவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி 17 பெண்கள், 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லைச் சேர்ந்த தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்களிடமும் தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளேன். அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். இதுபோன்ற விபத்துகள் இனிமேலும் நடக்க கூடாது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட்டம் நடத்தியுள்ளார். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என்றார்.
.png)