பூனம் பாண்டே மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/6a1a9c1ec69879318ab025acf5a1343a.jpg?width=836&height=470&resizemode=4)
பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை இரவு இறந்து விட்டதாகச் செய்திகள் வெளியானது. அவருடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் டீம் இதை தெரிவித்திருந்தது. அவர் மேலாளரும் உறுதி செய்திருந்தார். அதை தொடர்ந்து பல நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் பூனம் பாண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் உயிருடன் இருப்பதாக, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக் கூடியதுதான் என்று தெரிவித்துள்ள சிலர், இதனால் இறந்ததாக பப்ளிசிட்டி செய்திருப்பது அந்த நோய் குறித்து தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, அகில இந்திய திரைப்பட ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் டுவிட்டர் பக்கத்தில், பூனம் பாண்டேவின் செயல் முற்றிலும் தவறானது. புற்றுநோயை பயன்படுத்தி அவர் சுயவிளம்பரம் தேடிக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படியான செயல்களுக்கு பிறகு திரைத்துறையில் எதாவது உண்மையான மரணங்கள் நடந்தால்கூட மக்கள் நம்ப மாட்டார்கள். மற்ற நடிகர்கள் யாரும் தங்கள் சுயவிளம்பரத்துக்காக இந்த அளவுக்கு கீழ்த்தரமாக சென்றது கிடையாது. எனவே நடிகை பூனம் பாண்டே மீதும், அவரது மரணத்தை உறுதிசெய்த அவரின் மேலாளர்மீதும் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.