டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதப் போராட்டம்..!
தலைநகர் டெல்லியில் சமீப காலமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அதே சமயம், ஆம் ஆத்மி அரசு சட்டவிரோத டேங்கர் தண்ணீர் விநியோகத்தையும், ஊழலையும் ஆதரிக்க டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே ஜூன் 21-ம் தேதிக்குள் அரியானாவில் இருந்து டெல்லிக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சத்யாகிரக போராட்டத்தை மேற்கொள்வேன் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிஷி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது வரை சுமார் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அநீதிக்கு எதிராக போராட சத்யாகிரக பாதையை பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி கற்றுக்கொடுத்திருக்கிறார்.
அதன்படி தண்ணீர் சத்யாகிரகத்தை நான் தொடங்கி உள்ளேன். ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி விட்டு, காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளேன். டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த பதிவில் அதிஷி தெரிவித்துள்ளார்.