ராட்சத பலகை விழுந்து விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை பயங்கர சத்தத்துடன் சரிந்து அங்கிருந்த பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.
இதனால் அப்பகுதியில் நின்றிருந்தவர்களும், அந்த வழியாகச் சென்றவர்களும் அதில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 70 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராஜாவாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
மேலும் தற்போது விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் வழிகாட்டுதலின்படி, அதிகபட்சம் 40×40 அடி அளவிலான விளம்பரப் பலகைகள் மட்டுமே நிறுவ அனுமதிக்கப்படும் நிலையில் கீழே சரிந்து விழுந்த பலகை 120×120 அடியில் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விளம்பர பலகையை வைக்க ஈகோ மீடியா ஏஜென்சி அனுமதி பெறவில்லை என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.