2000 நோட்டு மாற்ற அக்டோபர் 7 வரை காலக்கெடு நீட்டிப்பு..!

ரூ. 2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, அதனை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன்(நேற்று) முடிவடைவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதோடு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ. 2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு ரூ. 2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து ரூ. 2000 நோட்டுக்கள் மாற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் புழக்கத்தில் இருந்த ரூ. 2000 நோட்டுக்கள் 93 சதவீதம் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக தெரிவித்தது. அதில் 87 சதவீதம் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன என்றும், மீதமுள்ள 13 சதவீதம் வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரூ. 2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அது வரை ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அக்டோபர் 7-ம் தேதிக்குப் பிறகு ரூ. 2000 நோட்டுகள் செல்லும் என்றும், ஆனால் அவற்றை ரிசர்வ் வங்கியின் பட்டியலிடப்பட்டுள்ள 19 அலுவலகங்களில் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வாறு மாற்றிக் கொள்ள முடியும் என்றும், அதுவும் ஒரு நேரத்தில் அதிகபட்சம் ரூ. 20,000 வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பணத்தை மாற்றுவதாக இருந்தால், பணத்தை தபால் அலுவலகம் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும் என்றும், அவ்வாறு அனுப்பப்படும் பணம் சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவது ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், நீதிமன்றங்கள், சட்ட அமைப்புகள், அரசு துறைகள் ஆகியவை ரூ. 2000 நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களுக்கு அனுப்பி வரவு வைத்துக் கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 8-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோடுகளின் நிலைமை என்ன என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,
1. அரசு மற்றும் தனியார் வங்கி கிளைகள் உட்பட எந்த இடத்திலும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதையும், பரிமாற்றம் செய்வதையும் நிறுத்தப்படும்.
2. ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள், நிறுவனங்கள் 19 ரிசர்வ் வங்கி வெளியீட்டு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் ரூ. 20,000/- வரை தொடர்ந்து மாற்றிக் கொள்ளலாம்.
3. தனிநபர்கள், நிறுவனங்கள் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் கொடுத்து, இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் தொகையை மாற்றிக் கொள்ள முடியும்.
4. நாட்டிற்குள் இருக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை அரசு தபால் நிறுவனமான இந்தியா போஸ்ட் மூலம் போஸ்ட் வாயிலாக அனுப்பி, இந்தியாவில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்காக 19 ஆர்.பி.ஐ. அலுவலகங்களுக்கு அனுப்பலாம்.
5. இத்தகைய பரிமாற்றம் அல்லது டெபாசிட் அனைத்தும் ஆர்.பி.ஐ. மற்றும் அரசு விதிமுறைகளுக்கு இணங்க அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, ஆர்.பி.ஐ. விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடக்கும்.
6. நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க அமைப்புகள், அரசுத் துறைகள் அல்லது விசாரணை நடவடிக்கைகள் அல்லது அமலாக்கத்தில் ஈடுபட்டுள்ள பிற பொது துறை அமைப்புகள் தேவைப்படும்போது, எந்த வரம்பும் இல்லாமல் 19 ஆர்.பி.ஐ. வெளியீட்டு அலுவலகங்களில் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்/மாற்றலாம்.
இந்த அனைத்தையும் விட முக்கியமாக 2000 ரூபாய் நோட்டு அக்டோபர் 7-ம் தேதிக்கு பின்பும் அதிகாரபூர்வ நாணயமாக கருதப்படும். ஆனால் அக்டோபர் 8-ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்கு இணையாக தொகையை பெற வேண்டுமெனில் ஆர்.பி.ஐ. அலுவலங்களுக்கு தான் வர வேண்டும். இந்த சலுகையும் அடித்த அறிவிப்பு வரும் வரைதான் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியுள்ளது.