காலக்கெடு நிறைவு : இனியும் தங்கியிருந்தால் 3 ஆண்டுகள் சிறை... ரூ.3 லட்சம் அபராதம்..!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
மருத்துவ விசா தவிர பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஏப்.24 முதல் எல்லைப்பகுதியான அட்டாரி வழியாக, பாகிஸ்தானை சேர்ந்த 537 பேர் வெளியேறி உள்ளனர்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025 இன் பிரிவு 23 இன் கீழ்,குறுகிய கால விசாக்களில் இந்தியாவை விட்டு வெளியேறத் தவறிய பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாடு கடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர்களைக் கண்டறிந்து அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா – அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர்.