1. Home
  2. தமிழ்நாடு

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து! பிஆர் பாண்டியன் எச்சரிக்கை !

சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீருக்கு ஆபத்து! பிஆர் பாண்டியன் எச்சரிக்கை !


சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, அதற்கு காரணமான காவிரி மேலாண்மை கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, சென்னை பெசன்ட் நகரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு காவிரி உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேட்டூர் அணை -சரபங்கா திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சுயநலத்திற்காக நிறைவேற்ற முயற்சிக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

2015-ல் ஜெயலலிதாவால் கைவிடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது அவருக்கு செய்கிற துரோகம். இந்த திட்டத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், மூன்று மாதகாலமாக மத்திய அரசாங்கமும் காவிரி மேலாண்மை ஆணையமும் வழக்கிற்கு உரிய பதிலைத் தராமல் காலம் கடத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் ஜெயின் தலைமையில் இணையம் வழியாக நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக, தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, மேகதாதுவில் அணை கட்டி புதிய நீர் பாசன பகுதிகளை நாங்கள் விரிவாக்கம் செய்வோம் என கர்நாடக அதிகாரிகள் பேசியதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே ஆணையக் கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கையை ஆணையத் தலைவர் வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றினால் காவிரி டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிவதோடு, 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் பறி போகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like