1. Home
  2. தமிழ்நாடு

மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல் : சென்னையில் பல பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்..!

1

சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். சாலைகளில் வெள்ள நீர் தேங்கியும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இன்று இரவு வரை அதிகன மழை நீடிக்கும் என்பதால் மீட்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

குறிப்பாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் நீரில் அடித்து செல்லப்படும் காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வேளச்சேரி, கீழ்பாக்கம் போன்ற இடங்களும் வெள்ள நீரால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

1

இந்நிலையில் விடாது பெய்து வரும் அதிகன மழையால் வேளச்சேரி விஜயநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இடுப்பளவுக்கு சூழ்ந்த தண்ணீரால் அங்கு வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்காக மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு நீர் தேங்கி இருப்பதால் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கோயம்பேடு முதல் வட பழனி செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. மழைநீர் கழிவு நீருடன் கலந்து ஆங்காங்கே தேங்கி சுகாதாரமற்ற சூழலும் நிலவி வருகிறது. தொடர்ந்து புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரும்வரை தேவையின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like