சைபர் கிரைம் குற்றவாளிகளை எல்லை தாண்டி சென்று பிடித்து வந்த தனிப்படை போலீசார்..!
சென்னையை சேர்ந்த இருவரிடம் ரூ.2 கோடியை சுருட்டிய 3 பேரை வங்கதேச எல்லை வரை சென்று தமிழக போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு கோடிகளை குவிக்கலாம் என்று ஆசைவார்த்தைகளை அள்ளி வீசி மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
இதுபோன்று முகநூல் வழியாக மோசடியான லிங்க்கை அனுப்பியுள்ளனர், இதை நம்பி தொழிலதிபர் ஒருவர் ரூ.1 கோடியே 64 வட்சத்தை முதலீடு செய்துள்ளார். இதன்பிறகே அது மோசடியான வர்த்தக நிறுவனம் என்பது தெரியவந்தது. இதேபோன்று இன்னொருவர் ரூ.50 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
இந்த 2 மோசடி சம்பவங்கள் தொடர்பாகவும் தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இணையதளம் வழியாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ரூ.2 கோடியை சுருட்டிய நபர்கள் வங்கதேச எல்லை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று மேற்கு வங்காளத்தை சேர்ந்த சகசாதா ஹுசைன் என்ற வாலிபரை கைது செய்தனர். 23 வயது வாலிபரான இவர் வங்க தேச எல்லையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பதுங்கி இருந்தார்.
அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். நாடு முழுவதும் இவர் மீது 29 வழக்குகள் உள்ளன. இதேபோன்று மேற்கு வங்காளத்தை சேர்ந்த அமித்சகா என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வழக்குகளில் தொடர்புடைய இவருடன் போலி வங்கி கணக்கு முகவராக செயல்பட்ட கமலேஷ் தேப்நாத் என்பவரும் கைதானார்.
இதையடுத்து சைபர் கிரைம் குற்றவாளிகளை எல்லை தாண்டி சென்று பிடித்து வந்த தனிப்படை போலீசாரை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டினார்.