குற்றால குளியல் எப்போது..?: தென்காசி கலெக்டர் பதில்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை கடந்த 19 மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையை முன் வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் சேதமடைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ், பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிப்பது பற்றி கேட்டபோது, “தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இது வரை தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. தமிழக அரசு அனுமதி வழங்கினால், உடனடியாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.