தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 இல் தொடக்கம்..!
தமிழகத்தில் இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர இதுவரை 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3 ஆயிரத்து 450 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு 550 இடங்கள் உள்ளன. அரசு, தனியார் கல்லூரி என 9 ஆயிரத்து 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 496 இடங்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வழங்கப்படுகின்றன. பிடிஎஸ் மருத்துவப் படிப்பிற்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 900 இடங்கள் உள்ளன. இதில், 126 சீட்டுகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் 11 ஆயிரத்து 350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இளநிலை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர இதுவரை 72,743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இளநிலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் சேர 72 ஆயிரத்து 743 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்கத் தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். கலந்தாய்வுக்காக போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், மேலும் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.