வீட்டில் உள்ளவர்கள் ஊழலை தடுக்காவிட்டால் ஊழலுக்கு முடிவு கட்ட முடியாது - உயர் நீதிமன்ற நீதிபதி!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/c80bada8c6caf3fd760eadc4534f0aac.webp?width=836&height=470&resizemode=4)
கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் சக்திவேல். இவரது மனைவி தெய்வநாயகி. இவர்கள் மீது 1992 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.6,77,626 அளவில் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2011-ல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை நிலுவையில் இருந்த போது சக்திவேல் இறந்தார். இந்த வழக்கில் தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 2017-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தண்டனையை ரத்து செய்யக் கோரி தெய்வநாயகி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை இன்று விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், “ஒரு பொது ஊழியரின் மனைவியான மனுதாரர், கணவர் லஞ்சம் வாங்குவதை தடுத்திருக்க வேண்டும். லஞ்சம் வாங்கக்கூடாது என்பது வாழ்வின் தத்துவமாகும். லஞ்சம் வாங்குவோரின் குடும்பம் பாதிப்பை சந்திக்கும். தவறான வழியில் வந்த பணத்தை அனுபவித்தால் அதனால் ஏற்படும், பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
நாட்டில் ஊழல் கற்பனைக்கு எட்டாதளவுக்கு பரவியுள்ளது. வீடுகளிலிருந்து ஊழல் தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்கள் ஊழலை தடுக்காவிட்டால் ஊழலுக்கு முடிவு கட்ட முடியாது. இதனால் தான் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், ‘ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும்’ என இளைஞர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.
மனுதாரர் தவறான முறையில் பெற்ற பணத்தில் வாழ்ந்துள்ளார். இதனால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மனுதாரருக்கு தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மனுதாரரை சிறையில் அடைக்கவும், அவர் சட்டவிரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.