கொரோனாவால் தான் அரசியல் அறிவிப்பு தள்ளிபோகிறது.. ரஜினியின் சகோதரர் பரபரப்பு தகவல் !
கொரோனாவால் தான் அரசியல் அறிவிப்பு தள்ளிபோகிறது.. ரஜினியின் சகோதரர் பரபரப்பு தகவல் !

சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் கடிதம் ஒன்று பரவி வருகிறது. அதில் ரஜினியின் உடல்நலம் குறித்தும், அரசியல் நிலைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்தும் இடம்பெற்றுள்ளன. தற்போதைய கொரோனா காலத்தில் ரஜினி மக்களை சந்தித்து அரசியல் பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே கொரோனா பாதிப்பு காரணமாக தான் அவர் அரசியல் ரீதியான நடவடிக்கை இல்லாமல், நிர்வாகிகள் சந்திப்பு நடத்தாமல் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அந்த கடிதம் நான் எழுதியது இல்லை என நேற்று ரஜினி விளக்கம் அளித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020
இந்நிலையில், இதுகுறித்து ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா அளித்த பேட்டியில், கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனாவால் கட்சியின் பெயர், கொடி, கொள்கை போன்றவற்றை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரியவரும் எனத் தெரிவித்தார்.
newstm.in