கொரோனா அச்சுறுத்தல்.. நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு !
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தனர்.
இதையடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது.
நீட் தேர்வு போன்று ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. JEE Main தேர்வுகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரையிலும், JEE Advanced தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in