கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தர ரூ.2500 வாங்கும் மருத்துவமனை!
கொரோனாவுக்கு நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தருவதற்கு ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதை அடுத்து தனியார் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய அந்த வீடியோவில் ஒரு நபர் , கொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் தர மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஆகும் செலவு குறித்தும் பேசுகிறார்.
இது குறித்து தெரிவித்துள்ள மீரட் மாஜிஸ்திரேட், வீடியோ வைரலானதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
newstm.in