நவம்பரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. எனினும் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி கடுமையாக போராடி வருகிறது.
அந்த வகையில், சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே சாலையில் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் 2ஆம் கட்ட மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையார் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.3.9 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இரவு நேரங்களிலும் மருத்துவ முகாமை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏறக்குறைய 30 லட்சம் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்ற நடவடிக்கைகளை இன்னும் 3 முதல் 4 மாதங்கள் தொடர்ந்து செய்தால் மட்டும்தான் நல்ல முடிவு கிடைக்கும்.
இதுவரை 30 லட்சம் பேர் வீட்டு தனிமையை முடித்துள்ளனர். இன்றைய தினத்தில் 2¼ லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முககவசம் அணியாமல் மக்கள் அலட்சியம் செய்கிறார்கள். முககவசம் மட்டுமே தற்போது கொரோனாவுக்கு மருந்து. இன்னும் 3 மாத காலத்துக்கு முககவசம் கட்டாயம் பொது மக்கள் அணிய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
newstm.in