2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மாணவர்களுக்கு கொரோனா..!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் தார்வார் டவுனில் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில். இங்கு படித்து வரும் மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பாதித்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகே கல்லூரி திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தார்வார் மாவட்ட கலெக்டர் நித்தீஸ் பட்டேல் நிருபர்களிடம் கூறியதாவது: “தார்வாரில் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 66 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களை கல்லூரியின் 2 தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுள்ளனர்.
இருப்பினும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், அந்த கல்லூரியில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.