சென்னையில் மீண்டும்.. நர்சிங் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா..!

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள MMM செவிலியர் கல்லூரி மாணவிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் 210 பேருக்கு பரிசோதனை செய்ததில், 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அனைவரும் நலமாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
மேலும் , சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்கள், வகுப்பறைகள், விடுதிகள், கேன்டீன்களில் மாணவர்கள் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.