மதம் மாறியவர்களுக்கு இந்த சான்று கிடையாது: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மதம் மாறியவர்களுக்கு சாதிமறுப்பு திருமணத்திற்கான சான்று வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். கிறிஸ்தவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த இவர், அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கிறிஸ்தவ ஆதிதிராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாட்சியர், மதம் மாறியவருக்கு சாதி மறுப்பு திருமணச் சான்று வழங்க முடியாது எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பால்ராஜ் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, ‘கடந்த 1997ம் ஆண்டு அரசாணைப்படி மதமாறிய நபர்களுக்கு சாதி மறுப்பு திருமணச் சான்றிதழ் வழங்க முடியாது' எனக்கூறி, மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மதம் மாறியவருக்கு சாதிமறுப்பு திருமணச் சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.