அதிமுக நிர்வாகி பேச்சால் சர்ச்சை..! செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்தது...ஆனால்

ஈரோடு மாவட்டம், ஆசனூர், அரேப்பாளையத்தில் அதிமுக சார்பில் நேற்று மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
தற்போது கவுன்சிலர் பதவிக்கு கூட சிபாரிசு தேவைப்படுகிறது. ஆனால், செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்த போது கூட, அவர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இப்போது சிறிய ஊரில் மாவட்ட செயலாளராக உள்ளார். ஆனால் சந்தோஷமாக இருக்கிறார். படுத்தவுடன் தூங்குகிறார். கவலை இல்லை.
மக்களோடு மக்களாக உள்ள கட்சி, மக்களுக்கு சேவை செய்கிற கட்சி அதிமுக. இப்போது நம்முடன் பாஜக சேர்ந்து பலமாக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில், அதிமுக தோல்வி அடைந்ததற்கு பொதுமக்கள் காரணம் அல்ல; நாம் தான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும், இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன். காரணம், முஸ்லிம்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கோவையில் முஸ்லிம் ஜமாத் தலைவராக இருந்தவன். கோவையில் என்ன நிலவரம் என்பது எனக்கு தெரியும். முன்னாள் அமைச்சர் வேலுமணி, முஸ்லிம் மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தும் கூட அதிமுகவுக்கு அவர்கள் ஓட்டு போடவில்லை.
2024 மக்களவைத் தேர்தலிலும், நம்முடன் இருந்த முஸ்லிம் கட்சிகள் கூட திமுகவுக்கு தான் ஓட்டு போட்டன. இப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் நமக்கு மிகப்பெரிய பலம் வந்துள்ளது. அதிகாரம் கிடைத்துள்ளது. இன்று அதிகாரம் தான் அனைத்துக்கும் தேவைப்படுகிறது. பாஜக - அதிமுக பலமான கூட்டணியாக வரும் என அப்துல் ஜப்பார் கூறினார்