சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்.. ஆனால், மதிப்பெண் வழங்கப்படும் - சிபிஎஸ்இ அறிவிப்பு..!

10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது; அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்ப்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்விவகாரம் குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வு வினாத்தாள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய பாடத் திட்டக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.