இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்ட தடை..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்தவர் தா.பாண்டியன். அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி 26-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த உத்தப்பநாயக்கனூரில் உள்ள விவசாய இடத்தில், தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் கட்ட அக்கட்சியினர் முடிவு செய்தனர். இதற்காக, உத்தப்பநாய்க்கனூரில் உள்ள அவரது பூர்வீக இடத்தில் மணி மண்டபம் கட்ட முடிவு செய்து, அக்கட்சியினர் கொடி நாட்டினர்.
ஆனால், இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கு, தா.பாண்டியனின் உறவினரான பிரேம் சந்தர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலத்தில், தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் அமைக்கத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.